Bookstruck

நித்தமும் சந்தோஷம்

பீம் மற்றும் ராம் பக்கத்து வீட்டுக்காரர்கள். ராம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். ஆனால் பீம் எப்போதும் சோகமாகவும் கவலை நிறைந்தும் இருப்பான். ராமிற்கு நான்கு ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதனால்தான் ராம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று பீம் நினைத்தான். அதனால் அவன் இரவும் பகலும் கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்து, தரிசாக இருந்த ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கினான். அப்படியிருந்தும் பீமை விட ராம் அதிக திருப்தியுடன் இருந்தான். ராமின் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று பீமின் மனதில் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது? அவன் எப்போதும் எப்படி சந்தோஷமாக இருக்கிறான்? ராமிற்கு திருமணம் ஆனது. அவனது மனைவி மிகவும் அழகாக இருந்தாள், பார்ப்பதற்கு சந்திரனின் பிறை போல இருந்தாள்! திருமணம் ஆனதால்தான் ராம் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று பீம் நினைத்தான். அதனால் பீம் நிறைய பெண்களைப் பார்த்து, ராமின் மனைவியை விட அழகான ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொண்டான். ஆனாலும் ராமைப் போல் அவனால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. ஆனால் சந்தோஷமாக இருக்க அவன் ரொம்ப முயற்சி செய்தான். ராம் இரண்டு மாடிக் வீடு கட்டினான், அதனால் பீம் மூன்று மாடிக் வீடு கட்டினான். ராம் தினமும் பத்து பேருக்கு உணவு கொடுப்பான், பீமின் வீட்டில் இருபது பேர் சாப்பிடுவார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் பீம் ராமை விட உயர்ந்தவனாக இருக்க முயற்சி செய்தான், ஆனால் அவனால் சந்தோஷம் மட்டும் கிடைக்கவில்லை. ராம் தினமும் எப்படி நடந்துகொள்கிறான் என்று பீம் கவனிக்க ஆரம்பித்தான். ராம் எந்த நேரத்தில் என்ன செய்கிறான் என்று பார்க்க ஆரம்பித்தான். ராமை விட இரண்டு மடங்கு வேலை பீம் செய்தான், ஆனாலும் பீம் கஷ்டத்தில் இருந்தான், ராமைப் போல் சந்தோஷமாக இல்லை. அதனால் பீம் எப்போதும் சோகமாக இருந்தான். அப்படி இருக்கும் நேரத்தில் அந்த கிராமத்திற்கு ஒரு சாது வந்தார். ராம் அவரை மிகுந்த மரியாதையுடன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அன்போடு உபசரித்தான். அவனது அன்பு மற்றும் உபசரிப்பைப் பார்த்து சாது மகிழ்ச்சி அடைந்து, "மகனே, உனக்கு என்ன வேண்டும் கேள்," என்றார். ராம் பணிவுடன் சொன்னான், "எனது மனைவி நல்ல குணமுள்ளவள், எனது குழந்தைகள் நல்ல சுபாவமுள்ளவர்கள், என்னிடம் என்ன இருக்கிறதோ அதில் நான் திருப்தியாக இருக்கிறேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன், முடிந்தவரை மக்களுக்கு கொஞ்சம் உதவி செய்கிறேன். எனது குடும்பம் ஆரோக்கியமாக இருக்கிறது. இதுவே எனது அதிர்ஷ்டம், அதுவே எனக்குப் போதும். எனது நிலைமை எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் என்று நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்," என்றான். "உனது திருப்தியும் சந்தோஷமும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. கடவுள் எப்போதும் உங்கள் மீது கருணை காட்டுவார்," என்று சாது ராமை ஆசீர்வதித்தார். அதன் பிறகு சாது பீமின் அழைப்பின் பேரில் அவனது வீட்டிற்குச் சென்றார். பீம் பெரிய ஆரவாரத்துடன் சாதுவை உபசரித்தான். ராமை விட இரண்டு மடங்கு அதிகமாக உபசரிப்பு செய்தான். சாது திருப்தி அடைந்து அவனிடமும் என்ன வேண்டும் என்று கேட்கச் சொன்னார். "எந்த விஷயத்திலும் எனது பக்கத்து வீட்டுக்காரன் ராம் என்னை விட அதிகமாக சிறந்தவனாக இருக்கக் கூடாது, இந்த ஆசீர்வாதம் எனக்குப் போதும்," என்று பீம் உடனடியாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தினான். சாது ஆச்சரியம் அடைந்து, "உனக்காக என்ன வேண்டுமானாலும் கேட்டுக்கொள், அதில் மற்றவர்களைப் பற்றி பேசுவது, அவர்களை கீழே இழுப்பது நல்லது இல்லை, இது தர்மம் ஆகாது," என்று சாது பீமை எச்சரித்தார். அதற்கு பீம், "ராமை விட உயர்ந்தவனாக இருப்பதுதான் எனக்கு சந்தோஷம். உங்களால் எனக்கு இந்த ஆசீர்வாதத்தை கொடுக்க முடியுமென்றால் கொடுங்கள், இல்லையென்றால் இது எனது துரதிர்ஷ்டம் என்று நான் நினைத்துக்கொள்வேன்," என்றான். சாது ஒரு நிமிடம் கண்களை மூடிவிட்டு பின்னர், "உனது ஆசை கண்டிப்பாக நிறைவேறும். ஆனால் அதற்கு ராமின் அனுமதி வேண்டும்," என்றார். சாது சொன்னதைக் கேட்டு பீம் கோபமடைந்து, "நீங்கள் எனக்கு ஆசீர்வாதம் கொடுக்க விரும்பவில்லை என்றால் கொடுக்காதீர்கள். ஆனால் ராம் இதற்கு அனுமதி கொடுப்பான் என்ற எண்ணத்தில் நீங்கள் இருக்க வேண்டாம்," என்றான். "அட முட்டாளே, ராம் அனுமதி கொடுத்தால் நீ அவனை விட அதிகமாக திருப்தி அடைந்து, செல்வந்தன் ஆவாய். ராம் சம்மதிக்கவில்லை என்றால் உன்னை ஒப்பிடும்போது அவன் தாழ்ந்தவனாக இருப்பான். இந்த ரகசியம் ராமுக்குத் தெரியாது, அதனால் இரண்டு விதத்திலும் உனக்கே லாபம். ராமை நான் இங்கே வரச்சொல்லியிருக்கிறேன், உடனே தகவல் அனுப்பு," என்று சாது சொன்னார். பீம் ராமை வரவழைத்தான். ராம் வந்த பிறகு பீமின் விருப்பம் தெரிந்ததும், அவன் உடனடியாக அனுமதி கொடுத்தான். சாது ஆச்சரியம் அடைந்து ராமிடம், "மகனே, மற்றவர்களை விட நாம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் தோன்றும். பீம் உன்னை விட சிறந்தவனாக இருக்க வேண்டும், அதற்கு நீ சம்மதம் கொடுத்திருக்கிறாய். ஏன் இப்படி செய்தாய் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? அதற்குப் பின்னால் உனது நோக்கம் என்ன?" என்று கேட்டார். "நீங்கள் மகான். உங்களிடம் என்ன மறைப்பது? பக்கத்தில் இருக்கும் மக்கள் நம்மை விட குறைந்த நிலையில் இருந்தால் அவர்களுடைய வெறுப்பு, பொறாமை, அலட்சியம் போன்ற உணர்வுகள் அதிகமாக எழும், அது நமக்கு வேதனையாக இருக்கும். அது நம் மனதை மிகவும் கஷ்டப்படுத்தும். அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்களாக இருந்தால் நம்மை அவர்கள் மறந்து விடுவார்கள், இல்லையென்றால் நம் மீது இரக்கம் கொண்டு உதவி செய்ய முன்வருவார்கள். நம்மைப் பற்றி மட்டுமே நாம் சிந்தித்துக் கொண்டிருந்தால், நமது முன்னேற்றத்தைப் பற்றி நாம் திருப்தியாக இருந்தால், அந்த திருப்தி எப்போதும் குறையாது. மற்றவர்கள் முன்னேற வேண்டும் என்று விரும்புபவர்கள், அந்த முன்னேற்றத்தை மகிழ்ச்சியோடு பார்ப்பவர்கள் எப்போதும் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருப்பார்கள்," என்றான். ராமிற்கு சந்தோஷம் இருப்பதன் ரகசியம் இந்த வார்த்தைகளிலிருந்து பீமுக்குத் தெரிந்தது. சாது இந்த உண்மையை அவனுக்குப் புரிய வைக்கத்தான் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தார் என்பதும் பீமின் மனதில் தெரிந்தது. அந்த நாளில் இருந்து பீம் மற்றவர்களின் முன்னேற்றத்தில் மகிழ்ச்சி கொள்ள கற்றுக்கொண்டான். இப்போது அவனுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்க ஆரம்பித்தது. இப்படி அவன் நித்தமும் சந்தோஷமாக மாறினான்.