அப்சரசின் வம்சம்
மனிதன் ஆரம்பத்தில் மிகவும் மோசமாக இருந்தான் என்று கூறுகிறார்கள். ஆனால் மனித இனத்தில் அழகானவர்கள் பிறந்தார்கள். அதற்கு காரணம் ஒரு அப்சரஸ். அந்த கதை இதோ:
தேவலோகத்தில் சுப்ரமா என்ற அப்சரஸ் வாழ்ந்து வந்தாள். ஏதாவது ஒரு தேவனைக் கல்யாணம் செய்து கொண்டு அவள் சந்தோஷமாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால், பூலோகத்தில் வாழ வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவளுடைய தோழிகள், "பூலோகத்தில் சொர்க்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மக்கள் தானம் செய்கிறார்கள். உனக்கு என்ன தோன்றுகிறது?" என்று கேட்டார்கள். ஆனால் அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திரன் அவளை அழைத்து நிறைய அறிவுரைகள் சொன்னான். "பார், பூலோகத்தில் போக வேண்டுமென்ற ஆசை உனக்கு இருக்கிறது, போ. ஆனால் ஒரு விஷயம் ஞாபகம் வைத்துக்கொள். நீ அங்கு எந்த ஒரு பொருளையும் தொட்டால் நீ கல்லாகி விடுவாய். இதை நினைவில் வைத்துக்கொள்."
இந்திரன் இவ்வளவு சொன்னதும், இந்திரன் என்னை எச்சரித்தான். பூலோகத்திற்கு போகக் கூடாது என்று சொல்லவில்லை என்று அவள் நினைத்தாள். சுலபமாக இந்திரனின் அனுமதி கிடைக்கும் என்று அவள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை. அதனால் அவள் சந்தோஷம் அடைந்தாள். தன்னுடைய தோழிகளிடம் மற்றும் இந்திரனிடம் விடைபெற்று பூலோகத்திற்குப் போக தயாரானாள்.
அவள் தன்னுடைய ஒரு தோழியை உடன் அழைத்து வந்தாள். ஆகாயத்தில் பறந்து நிலத்தைப் பார்த்து வியந்து கொண்டிருந்தாள். அவள் நிலத்திற்கு மிக அருகில் வட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு மனிதன் செண்பக மரத்தில் ஏறி பூக்களை பறித்துக் கொண்டிருந்தான். அந்த இரண்டு பேரையும் பார்த்ததும் அவன் ஆச்சரியப்பட்டான். வானத்தில் பறந்து அவர்கள் அருகில் வந்ததும், சில பூக்களை அவர்கள் மீது எறிந்தான். அதில் ஒரு பூ சுப்ரமா மீது பட்டதும், அவள் கல்லாகி கீழே விழுந்தாள்.
அவளுடைய தோழி தன்னுடைய உடலில் எந்த பூவும் படாதவாறு பார்த்துக்கொண்டாள். அவள் திரும்ப இந்திரனிடம் சென்றாள். சுப்ரமா எப்படி கல்லாக மாறி கீழே விழுந்தாள் என்பதை விவரித்து கூறினாள். இந்திரன் எல்லாவற்றையும் கேட்டு, "அந்த கல்லை யாராவது ஒரு இடத்தில் இருந்து எடுத்தால், அவள் தன்னுடைய உருவத்தை மீண்டும் பெறுவாள். அவள் பூலோகத்தில் யாரையாவது திருமணம் செய்து குழந்தைகள் பெற்றாள் என்றால், நான் அவளை சொர்க்கத்திற்கு அழைத்துக்கொள்கிறேன்" என்றான்.
"தேவேந்திரா! காட்டில் விழுந்து கிடக்கும் கல்லை தூக்கி செல்ல யாருக்குத் தோணும்? என் தோழி அந்த நிலையில் எத்தனை நாள் இருக்க வேண்டும் என்று யாருக்கு தெரியும்?" என்று சுப்ரமாவின் தோழி கேட்டாள். "அதற்காகவும் நான் ஒரு வழி செய்கிறேன்" என்று இந்திரன் கூறினான்.
மறுபுறம், பூலோகத்தில் இருந்த அந்த மனிதனுக்கு இரண்டு அப்சரஸ்கள் மறைந்து போனது போல தோன்றியது. நீண்ட நேரம் அவர்கள் திரும்ப வருவார்களா என்று காத்திருந்தான். இறுதியில் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு மரத்திலிருந்து கீழே இறங்கி வீடு திரும்பும் போது, ஒரு கருப்பு கல் கீழே கிடப்பதைக் கண்டான். அவன் வந்தபோது அந்த கல் அங்கு இல்லை. 'இது எங்கிருந்து வந்தது?' என்ற எண்ணம் அவனுக்குள் வந்தது. அவன் அந்தக் கல்லை எட்டி உதைத்தான். ஆச்சரியமாக அந்த கல்லில் நான்கு முத்துக்கள் மின்னியது. அவன் அந்த முத்துக்களை எடுத்தான். அவன் மீண்டும் அந்த கல்லை எட்டி உதைத்தான். ஆனால் இந்த முறை அந்த கல்லிலிருந்து எதுவும் வரவில்லை.
அவன் தன்னுடைய கிராமத்திற்கு சென்று அந்த அதிசயமான செய்தியை ஊர் மக்களிடம் விவரித்தான். ஆனால் யாருக்கும் உண்மை என்று தோன்றவில்லை. "வானத்தில் பெண்கள் பறந்து வந்தார்கள் என்றும் கல்லிலிருந்து முத்துக்கள் வந்தனவாமே!" என்று கூறினார்கள். ஆனால் சிலருக்கு ஆர்வமாக இருந்ததால் அந்த கல்லை பார்க்க புறப்பட்டார்கள். ஒவ்வொருவரும் அந்த கல்லை உதைத்தார்கள். ஒவ்வொருவருக்கும் நான்கு முத்துக்கள் கிடைத்தது.
ஒவ்வொருவருக்கும் நான்கு முத்துக்கள் கிடைத்ததால், அதை மறைக்க வேண்டிய காரணம் இல்லாமல் போனது. அந்த விஷயம் ஊர் முழுவதும் பரவியது. அருகில் இருந்த கிராமத்திற்கும் பரவியது. மக்கள் அங்கு புனித நீராட வருகிறார்கள் அதுபோல வரத் தொடங்கினார்கள். முத்துக்களை எடுத்துக்கொண்டு திரும்பிப் போனார்கள். அந்த கல்லின் அருகில் இரவும் பகலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முத்து கிடைப்பதற்காக மக்கள் சண்டை போட ஆரம்பித்தார்கள். அதிகாரிகள் அமைதி மற்றும் ஒழுங்கை காக்க வரிசையில் நிற்க வைத்தார்கள். இந்த விஷயம் அரசனுக்கும் தெரிய வந்தது. முத்து எடுப்பவர்கள் அதில் இரண்டு முத்துக்களை 'வரி'யாக கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று அரசன் ஆணையிட்டான். தூர தூரத்திலிருந்து மக்கள் வரத் தொடங்கினார்கள். அவர்கள் தங்குவதற்கு இடங்கள் கட்டப்பட்டன.
அருகிலிருந்த ராஜ குடும்பத்திற்கும் இந்த செய்தி சென்றது. அந்தக் கல் சிந்தாமணி அல்லது கல்ப விருட்சம் போல அனைவருக்கும் தோன்றியது. புதிதாக பிறந்த குழந்தைகளும் கல்லில் கால் வைத்து முத்துக்களை எடுத்துச் சென்றார்கள். அரசனின் கருவூலம் நிரம்பியது. அதனால் அருகில் இருந்த அரசர்களுக்கு பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அந்த நாட்டின் மீது படையெடுக்க முடிவு செய்தார்கள். இதை அறிந்த அரசன் அந்தக் கல்லை எடுத்து தன்னுடைய கோட்டையில் வைக்க படைவீரர்களை அனுப்பினான். படைவீரர்கள் மிகுந்த சிரமத்துடன் அந்தக் கல்லை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தினார்கள். ஆச்சரியமாக அந்தக் கல் மறைந்துபோய் ஒரு அழகான பெண்மணி நிற்பதைப் பார்த்தார்கள். அவர்கள் வியப்படைந்தார்கள். சிலருக்கு பயம் ஏற்பட்டது.
"நீ யார்? இத்தனை நாட்கள் கல்லாக இங்கே எதற்காக இருந்தாய்? நீ எங்கிருந்து வருகிறாய்? உன் கணவர் பெயர் என்ன?" என்று கேள்விகள் கேட்டார்கள்.
"எனக்கு நாடு இல்லை, கணவன் இல்லை. நான் என்னுடைய பிடிவாதத்தினாலும் தவறினாலும் கல்லாகிப் போனேன். இப்போது உங்கள் தயவால் என்னுடைய பழைய உருவம் எனக்கு கிடைத்திருக்கிறது. யாராவது என்னை திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தால், நான் அவருடைய மனைவியாக இருக்க தயாராக இருக்கிறேன்" என்று சுப்ரமா சொன்னாள்.
அந்த படைவீரர்களில் ஒருவன் துணிந்து சொன்னான், "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் உங்களை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்."
அந்த இருவருக்கும் திருமணம் நடந்தது. சுப்ரமாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது - ஒரு பெண் மற்றும் ஒரு ஆண். அதற்குப் பிறகு அவள் இந்திர லோகத்திற்கு சென்றுவிட்டாள். அதுவரை மனிதனுக்கு இந்த உருவம் இல்லை. ஆனால் சுப்ரமாவின் குழந்தைகளுக்கு தேவர்களைப் போல அழகான உருவம் இருந்தது. இன்று அழகான ஆண்கள் பெண்கள் மனித இனத்தில் தென்படுகிறார்கள் என்றால் அவர்கள் இவளுடைய வம்சாவளியாகத்தான் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.